செய்திகள்

பழனி அருகே குட்டையில் நீச்சல் பழகிய மாணவி பலி

Published On 2018-09-27 10:12 GMT   |   Update On 2018-09-27 10:12 GMT
பழனி அருகே குட்டையில் நீச்சல் பழகிய மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழனி:

பழனி அருகே உள்ள புதுஆயக்குடியை சேர்ந்தவர் அழகர். விவசாயி. அவரது மகள்கள் மீனா (வயது 10), ஸ்ரீத்ரி (9). இவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6, 5-ம் வகுப்பு படித்தனர்.

அழகருக்கு கணக்கன் பட்டியை அடுத்த ராம பட்டிணம்புதூரில் சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு விவசாய பயன்பாட்டுக்காக அழகர் பண்ணை குட்டை அமைத்து தண்ணீரை சேமித்து வைத்திருந்தார்.

சம்பவதன்று அக்காளும், தங்கையும் அந்த தோட்டத்துக்கு சென்றனர். பின்னர் பண்ணைக்குட்டையில் இறங்கி நீச்சல் பழகி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்ரீத்ரி தண்ணீரில் மூழ்க தொடங்கினாள். இதைப்பார்த்த மீனா அவளை காப்பாற்ற முயன்றாள். ஆனால் அதற்குள் ஸ்ரீத்ரி தண்ணீரில் மூழ்கி பலியானாள். காப்பாற்ற சென்ற மீனாவும் தண்ணீரில் மூழ்கி மயங்கினாள்.

இதற்கிடையே அந்த வழியாக வந்த தொழிலாளர்கள் குட்டைக்குள் 2 சிறுமிகள் மூழ்கி கிடப்பதை பார்த்தனர். உடனே 2 பேரையும் மேலே கொண்டு வந்து பார்த்த போது, ஸ்ரீத்ரி ஏற்கனவே இறந்திருப்பதும், மீனா மயக்க நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.

உடனே அவளை ஒட்டன் சத்திரம் தனியார் மருத்துவ மனையில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News