தமிழக அமைச்சர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
மதுரை:
மதுரையில் இன்று நடந்த பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் இல்ல விழாவில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆதார் கார்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இதன் வாயிலாக சாதாரண மக்களும் ஆதார் கார்டு மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசின் மீதான பழியும் நீங்கியுள்ளது.
தமிழக அமைச்சர்கள் பேசும் வார்த்தைகள் அரசியல் விமர்சனத்துக்குட்பட்டவை. எனவே அவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்குமா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.
பாராளுமன்ற தேர்தலில் முன்பைவிட 350 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக பாரதீய ஜனதா முடிவு செய்யும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைப்பது தான் பாரதீய ஜனதாவின் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #tnministers