செய்திகள்

திருப்பூரில் போலீஸ் போல் நடித்து பணம் பறித்த கேரள வாலிபர் கைது

Published On 2018-09-26 11:43 GMT   |   Update On 2018-09-26 11:43 GMT
போலீஸ் என கூறி மோட்டார் சைக்கிள் வந்த திருப்பூரில் வாலிபரிடம் பணம் பறித்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்:

திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் அருகே உள்ள ஜெய்நகரை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 48). டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நல்லூர் ஈஸ்வரன் கோவில் அடுத்துள்ள எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள தனது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஆனந்தை மறித்து தான் போலீஸ் என்றும், சீருடை இல்லாமல் பணியில் இருப்பதாகவும் கூறி இருசக்கர வாகனத்துக்கான ஆவணம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை கேட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து ரூ.100 பெற்றுக்கொண்டு அனுப்பி விட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த ஆனந்த் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நல்லூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் வண்டி பெரியார் பகுதியை சேர்ந்த விமல்(37) என்பதும், இவர் முத்தனம்பாளையம் பொன்முத்துநகரில் வசித்து வருவதும் தெரியவந்தது.

கடந்த சில நாட்களாக விமல் இதுபோல் நல்லூர் பகுதிகளில் நின்று கொண்டு, பல இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விமலை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News