செய்திகள்

நாமக்கல் அருகே பெண் கழுத்தறுத்து கொலை - விவசாயி கைது

Published On 2018-09-26 11:06 GMT   |   Update On 2018-09-26 11:06 GMT
நாமக்கல் அருகே பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள குமரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமாயி (வயது 65).

இவருடைய வீட்டின் அருகே வசித்து வருபவர் நல்லுசாமி (77). விவசாயி.

குமரிபாளையத்தில் ராமாயிக்கு சொந்தமான நிலத்தையொட்டி நல்லு சாமிக்கு பாத்தியப்பட்ட நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள வரப்பு தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று ராமாயி தனது நிலத்தில் வளர்ந்துள்ள புறக்ளை பிடுங்குவதற்காக சென்றார். இரவு ஆன பிறகும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் அவரது மகன் லோகநாதன் தனது தாயை தேடி புறப்பட்டார். இரவு நேரம் என்பதால் உதவிக்கு உறவினர்களையும் கூடவே அழைத்துக் கொண்டு சென்றார்.

குமரிபாளையத்தில் உள்ள நிலத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு ராமாயி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். தாய் கொலை செய்யப்பட்டுள்ளதை பார்த்து லோகநாதன் கதறி அழுதார்.

இது குறித்து மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுகுமார் சம்பவ இடத்திற்கு வந்து ராமாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதனை தொடர்ந்து லோகநாதன் தனது தாயை நல்லுசாமி என்பவர் தான் கொலை செய்துள்ளார். அவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அவருக்கும் எங்களது குடும்பத்திற்கும் வரப்பு பிரச்சினை உள்ளது. அவரை பிடித்து விசாரித்தால் உண்மை தெரிய வரும் என போலீசில் புகார் கூறினார்.

இதையடுத்து போலீசார், நல்லுசாமியை பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர். விசாரணையில் நான் தான், ராமாயியை கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார்.

நல்லுசாமி போலீசாரிடம் கூறியதாவது:-

நேற்று மாலை ராமாயி, அவருக்கு சொந்தமான நிலத்தில் தனியாக புற்களை பிடுங்கி கொண்டிருந்தார். மாலையில் நான் அங்கு சென்றேன். அப்போது எங்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ராமாயியை பிடித்து இழுத்து, அவரது கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்தேன்.

அப்போது அவர் தப்பிக்க முயன்றார். ஆனாலும் நான், அவரை விடவில்லை. உயிர் போகும்வரை வாயையும், கழுத்தையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். உயிர் போனபிறகு நிலத்திலே உடலை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். போலீசாரின் அதிரடி விசாரணையில் நான் மாட்டிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து நல்லுசாமி மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags:    

Similar News