செய்திகள்

குமுளி மலைச்சாலையில் நிலச்சரிவு - கனரக வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை

Published On 2018-09-26 10:31 GMT   |   Update On 2018-09-26 10:31 GMT
குமுளி மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கன ரக வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 6 கி.மீ. தூரத்திற்கு மலைச்சாலை உள்ளது. கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக இரைச்சல் பாலம், கொண்டை ஊசி வளைவு மாதாகோவில் பகுதி ஆகிய பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்கி சீரமைப்பு பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

தற்போது திடீரென பெய்த கன மழையினால் மாதாகோவில் அருகே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் உத்தமபாளையம் தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் வாகனங்கள் சென்றால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை நிரந்தரமாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

சீரமைப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் மெட்டு வழியாக கேரளா செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் 2 வாரங்களில் முடியும். அதன்பின்பு போக்குவரத்து சீரமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News