செய்திகள்

பனப்பாக்கம் அருகே ரியல் எஸ்டேட் தரகர் வீட்டில் 11½ பவுன் நகை திருட்டு

Published On 2018-09-23 18:23 GMT   |   Update On 2018-09-23 18:23 GMT
பனப்பாக்கம் அருகே ரியல் எஸ்டேட் தரகர் வீட்டில் பீரோ லாக்கரை உடைத்து 11½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருந்தனர்.
பனப்பாக்கம்:

பனப்பாக்கத்தை அடுத்த நங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 60). ரியல் எஸ்டேட் தரகராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். மகள் சரண்யா பனப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மனைவி இறந்தபின் மகள் சரண்யாவுடன் அசோக் வசித்து வருகிறார். கடந்த 18-ந் தேதி சரண்யா வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டார்.

அசோக் வீட்டை பூட்டிவிட்டு பனப்பாக்கத்தில் உள்ள நண்பரை பார்க்க சென்றார். மாலை 5 மணிக்கு பள்ளி முடிந்து சரண்யா வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் தனது தந்தை அசோக்கிற்கு போனில் தெரிவித்தார். அவரும் உடனடியாக வீடு திரும்பினார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருந்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அசோக் புகார் அளித்தார். அதன்பேரில் காவேரிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமேதா திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News