செய்திகள்
ஒரத்தநாடு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கு கொலை மிரட்டல்- 7 பேர் மீது புகார்
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த தஞ்சை வியாபாரி உள்பட 7 பேர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமுருகானந்தம் (வயது 38). இவர் தஞ்சை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளராக உள்ளார்.
இவருக்கும் தஞ்சையில் கடை நடத்தி வரும் பிரபாகரன் என்பவருக்கும் பொருள் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பிரபாகரன் உள்பட 7 பேர் கும்பல் மேலஉளூர் சென்று தங்கமுருகானந்தத்தை தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் தெரிகிறது.
இதுபற்றி தங்க முருகானந்தம் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி (பொறுப்பு) நாகராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.