செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு- வாலிபர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

Published On 2018-09-20 10:10 GMT   |   Update On 2018-09-20 10:10 GMT
விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றையொட்டி ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையில் ஏராளமான வீடுகள் உள்ளன.

தற்போது மழை காலம் நெருங்குவதையடுத்து அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றையொட்டி ஆக்கிரமித்து கட்டியிருந்த 47 வீடுகளை அகற்ற கடந்த மாதம் பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். அவர்களுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டது.

ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது வீட்டை காலி செய்யாமல் அங்கேயே தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் வந்தனர். அவர்கள் பொருட்களை அப்புறப்படுத்தி வீடுகளை இடித்து அகற்றினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க போவதாக கூறி திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றினார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

வீட்டுக்குள் அவரது மனைவியும், 2 குழந்தையும் இருந்தனர். அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து கர்ணனையும், அவரது குடும்பத்தையும் மீட்டனர்.

பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதில் பெரும் பரபரப்பு எற்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. தீக்குளிக்க முயன்ற கர்ணனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News