பண்ருட்டி அருகே கோவிலில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 65). இவர் அந்த பகுதி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து அங்கு ஒரு கோவில் கட்டி வருகிறார்.
இந்த நிலையில் கோவில் கட்டுவதற்காக வசூலித்த பணத்தின் கணக்கு- வழக்குகளை அந்த பகுதி பொதுமக்கள் கேட்டனர். இதனால் மனம் விரக்தி அடைந்த ரத்தினசாமி நேற்று இரவு அவர் கட்டி வரும் கோவிலின் உள்ளே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ரத்தினசாமி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய ரத்தினசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.