புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு
புதுச்சேரி:
புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களது நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து காங்கிரசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு இடைக் கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், நியமனம் எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இதையடுத்து கடந்த மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் நியமனம் எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்றும் தீர்ப்பு வந்த பிறகே நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக இறுதியான முடிவு எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் வைத்திலிங்கம் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பா.ஜனதா சார்பாக ஆஜரான வக்கீல்கள் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள் எதுவும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அடையாள அட்டை கூட தேதி குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய அனைத்து அதிகாரத்தையும் சலுகைகளையும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதோடு அடுத்த மாதம் 9-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். #PuducherryAssembly #NominatedMLAs