செய்திகள்

மதுரையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் கைது- விடுதியில் இருந்த 35 பொட்டலங்கள் பறிமுதல்

Published On 2018-09-18 10:06 GMT   |   Update On 2018-09-18 10:06 GMT
மதுரையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் தங்கிய விடுதியில் இருந்து 35 பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
மதுரை:

மதுரையில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது. இதை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் சிறப்பு தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த ஜாக்சன் சாமுவேல் (வயது 20), கீழவைத்தியநாதபுரம் ஆகாஷ் (20) என்பது தெரிந்தது.

இதில் ஜாக்சன் சாமுவேல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டும், ஆகாஷ், மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

இவர்களுக்கு கோரிப்பாளையம் தனியார் கல்லூரியில் படிக்கும் பெரியகுளத்தைச் சேர்ந்த மாணவர் சூர்யா (19) கஞ்சா பொட்டலங்களை விற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்துக்கு சென்ற போலீசார் அங்கு விடுதியில் சூர்யா மற்றும் அவரது நண்பர் பிரேம் (20) ஆகியோரது அறையில் சோதனை நடத்தினர்.

இதில் 35-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சூர்யா, ஜாக்சன் சாமுவேல், ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
Tags:    

Similar News