மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் - ஆதரவாளர் மன்னன் பேட்டி
மதுரை:
பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் மண்டல தலைவர் சின்னான், நிர்வாகிகள் உதயகுமார், எம்.எல்ராஜ், வாவா புகர்தீன், பக்ருதீன் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.
அப்போது மன்னன் நிருபர்களிடம் கூறுகையில், மு.க.அழகிரியையும், எங்களையும் தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். இதற்காக தொண்டர்களை திரட்டி, இன்று முதல் கிளை கழகம் முதல் ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். அதனை தி.மு.க. தலைமைக்கு மின்னஞ்சல் மற்றும் பேக்ஸ் மூலம் அனுப்ப உள்ளோம். அழகிரியின் வீட்டில் இருந்து கையெழுத்து இயக்கம் தொடங்குகிறது என்றார்.
முன்னதாக மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் அண்ணா சிலை முன்பு திரண்டிருந்த போது, தி.மு.க.வினர் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது அஞ்சா நெஞ்சன் வாழ்க, கலைஞர் வாழ்க என அழகிரி ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது. #DMK #MKAzhagiri #Karunanidhi #MKStalin