செய்திகள்

தருமபுரி அருகே குடிபோதையில் தகராறு - லாரி டிரைவர் அடித்து கொலையா? போலீசார் விசாரணை

Published On 2018-09-14 12:23 GMT   |   Update On 2018-09-14 12:23 GMT
தருமபுரி அருகே குடிபோதையில் தகராறில் லாரி டிரைவர் அடித்து கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #murder

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பெரும் பாலையை அடுத்துள்ள சானார்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமுண்டி. இவரது மகன் சீனிவாசன் (வயது38). லாரி டிரைவரான இவர் அடகாசன அள்ளியை சேர்ந்த சுதாகர் என்பவருடைய லாரியில் இரண்டு பேரும் டிரைவராக இருந்து வந்தார்.

சம்பவத்தன்று இவர்கள் இரண்டு பேரும் பென்னாகரம் மேம்பாலம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் லாரியை நிறுத்தினர்.

பின்னர் இரண்டு பேரும் அங்கு மதுஅருந்தி விட்டு ஒருவருக்கொருவர் தகராறு செய்து தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் காலையில் எழுந்து சீனிவாசன் வீட்டிற்கு சென்றார். வீட்டில் உடல் சோர்ந்து காணப்பட்டுள்ளதால் அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் வீட்டில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சீனிவாசனுக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாக்டர்கள் அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில் திடீரென உடல்நிலை மோசமானதால் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து சீனிவாசனுக்கும் சுதாகருக்கும் நடந்த தகராறில் அவருக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் சீனிவாசன் இறந்திருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் உறவினர்கள் தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தின குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News