செய்திகள்
அரியலூரில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்
அரியலூரில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 3 பேரை தேடி வருகிறார்கள்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள செந்துறை பெரிய குறிச்சியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகள் சுகுணா(வயது 18). இவர் உடையார்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து செந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சுகுணாவை தேடி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள எடையார் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி பானுபிரியா (வயது22). இவர்களது மகள் அபி (வயது2).
அன்பரசனுக்கும் அவரது மனைவி பானுபிரியாவுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்குள் மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் பானுபிரியா தனது குழந்தை அபியை தூக்கி கொண்டு வெளியே சென்றார். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. பானுபிரியாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
இது குறித்து பானுபிரியாவின் தந்தை எத்திராஜ் உடையார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து குழந்தையுடன் மாயமான பானுபிரியாவை தேடி வருகிறார்கள்.