செய்திகள்

ஊட்டி மார்க்கெட் வளாகத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை - நகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு

Published On 2018-09-12 15:53 GMT   |   Update On 2018-09-12 15:53 GMT
ஊட்டி மார்க்கெட் வளாகத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை என்று நகராட்சி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
ஊட்டி:

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஊட்டி மார்க்கெட் தொடங்கப்பட்டது. இந்த மார்க்கெட்டில் ஆங்கிலேயர் அதிகமாக பயன்படுத்தும் சூப்புக்கான பாலக், கிளைக்கோஸ், டர்னீப் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகள், கோழி, ஆடு, அணை மீன்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு முக்கிய மார்க்கெட்டாக விளங்கியது.

மலை மாவட்டமான நீலகிரியில் விளையும் மங்குஸ்தான், ரம்பூட்டான், பிளம்ஸ், பேரிக்காய் போன்றவை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது. இதனை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தற்போது அந்த மார்க்கெட் ஊட்டி நகராட்சிக்கு சொந்தமானது ஆகும். மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள், துணிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்க்கெட்டில் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க நகராட்சி வாகனம் உள்ளே சென்று வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்துக்குள் சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் குறுகிய பாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் சிலர் வேகமாக வாகனங்களை ஓட்டி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மார்க்கெட்டில் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்பவர்கள், தங்களது கடைக்கு முன்பாக பொருட்களை வைப்பதாலும், வாகனங்களை முன்னால் நிறுத்துவதாலும் மக்கள் எளிதில் நடந்து செல்ல முடிவது இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டின் நுழைவுவாயில் பகுதிகளில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளனர். அதில் இங்கு வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. நகராட்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இருப்பினும் மார்க்கெட் வளாகத்துக்குள் சிலர் மாற்று வழியாக வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மார்க்கெட்டுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க வாகனங்களில் வந்து செல்வது வழக்கம் தான். ஆனால் சிலர் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிக்கொண்டு குறுகிய பாதையில் செல்வதால், பொதுமக்கள் ஒதுங்க கூட இடம் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் பெண்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். எனவே அனுமதியின்றி மார்க்கெட் வளாகத்துக்குள் வாகனங்களில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News