செய்திகள்

செங்கம் அருகே மான் வேட்டையாடிய 2 பேர் கைது- 25 கிலோ இறைச்சி,துப்பாக்கி பறிமுதல்

Published On 2018-09-12 10:40 GMT   |   Update On 2018-09-12 10:40 GMT
செங்கம் அருகே புள்ளிமானை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ இறைச்சி, நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை:

செங்கம் அருகே பிஞ்சூர் வனப்பகுதியில் புள்ளிமான்கள் உள்ளன. இந்த மான்களை சமூக விரோதிகள் வேட்டையாடி வருவதாக மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் செங்கம் வனத்துறை அதிகாரி ராமநாதன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் பிஞ்சூர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

அப்போது தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக இருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். அதில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

அவர்களிடம் இருந்த ஒரு சாக்குபையை வனத்துறையினர் சோதனை செய்தபோது, அதில் சுமார் 25 கிலோ புள்ளிமான் இறைச்சி இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் புதுப்பாளையம் அடிவாரம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 28), வீரானந்தல் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (38) ஆகியோர் என்பதும், அவர்கள் வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியை கொண்டு மான்களை வேட்டையாடி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News