செய்திகள்
ஈஸ்வரன்

மணமகள் ஓட்டம் எதிரொலி: அதிமுக எம்எல்ஏ திருமணம் 2 மாதம் தள்ளிவைப்பு

Published On 2018-09-12 04:50 GMT   |   Update On 2018-09-12 04:50 GMT
பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டை விட்டு சென்றதால் வேறு வரன் பார்த்து 2 மாதத்தில் திருமணம் செய்ய எம்எல்ஏ வீட்டார் முடிவு செய்துள்ளனர். #ADMK #EswaranMLA
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன் (வயது 43).

இவருக்கும் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள பனையம் பள்ளியை சேர்ந்த சந்தியா (23) என்ற பட்டாதாரி பெண்ணுக்கும் இன்று (புதன்கிழமை) சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.

திருமணம் நடக்க 9 நாட்கள் இருந்த நிலையில் மணமகள் சந்தியா திடீரென மாயமானார். அக்கா வீட்டுக்கு போவதாக கூறி விட்டு சென்றவர் மாயமாகி விட்டார். நண்பருடன் சென்று விட்டதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என அவரது தாயாரே கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

எம்.எல்.ஏ.வுடனான திருமணம் பிடிக்காத மணமகள் சந்தியா மணப்பாறையில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசார் மணப்பாறை சென்று புதுப்பெண் சந்தியாவை மீட்டு வந்தனர்.

அப்போது சந்தியா கூறும் போது, ‘‘எம்.எல்.ஏ.வுக்கு வயது அதிகம் என்பதால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் என்னை கட்டாயப்படுத்தியதால் வீட்டை விட்டு சென்றேன்’’ என வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.

சந்தியா

இதையொட்டி திருமணம் நிச்சயிக்கப்பட்ட அதே நாளில் (இன்று) எப்படியும் வேறு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்ய எம்.எல்.ஏ. மற்றும் அவரது உறவினர்களும் தீவிரமாக இருந்தனர்.

திருமணத்துக்கு தமிழக முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள இருந்ததால் பெண் பார்க்கும் படலம் முடுக்கி விடப்பட்டது. ஆனால் நாட்கள் மிகவும் குறைவாக இருந்ததால் பெண் பார்த்து முடிவு செய்ய தாமதம் ஏற்பட்டது.

எப்படியும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் நடத்தி காட்ட வேண்டும் என்ற எம்.எல்.ஏ. தரப்பினர் முயற்சி நடக்கவில்லை. இன்று ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கு திருமணம் நடக்கவில்லை.

இன்னும் 2 மாதத்தில் அதாவது ஐப்பசி மாதத்தில் நல்ல வரன் பார்த்து எம்.எல்.ஏ.வுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். #ADMK #EswaranMLA
Tags:    

Similar News