செய்திகள்

கடலூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் - 125 பேர் கைது

Published On 2018-09-10 10:13 GMT   |   Update On 2018-09-10 10:13 GMT
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதவாணன், சுப்பராயன், நகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் ஆளவந்தார், சிப்காட் செயலாளர் சிவானந்தம் உள்பட சுமார் 100 பேர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் 75 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வட்ட செயலாளர் தமிழ்மணி தலைமையில் வட்ட பொருளாளர் வடிவேல், நிர்வாகிகள் முருகன், மகேஷ், அமாவாசை முன்னிலையில் மாநில குழு உறுப்பினர் குளோப், நகர செயலாளர் ஹரிகிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் சுந்தர் ராஜா உள்பட 50 பேர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே திரண்டனர்.

பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு கடலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது கோ‌ஷங்களையும் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News