செய்திகள்

குட்கா ஊழல் - இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் சோதனை

Published On 2018-09-06 03:32 GMT   |   Update On 2018-09-06 03:32 GMT
குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். #GutkhaScam #CBIRaid
சென்னை:

குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., இந்த ஊழல் தொடர்பாக பெயர் குறிப்பிடாமல் கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை நடந்து இருப்பதால் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தது. இதிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் குட்கா ஊழல் தொடர்பாக ஏராளமான தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன.



இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு காலை 8 மணிக்கு 5 அதிகாரிகள் சென்றனர். வீட்டை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் முகப்பேர் மேற்கில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடு, அவரது அலுவலகம், குட்கா ஊழலில் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜின் வீடு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது. அமைச்சரின் உதவியாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சில பினாமிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 40 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் சிபிஐ அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்தனர். இதில் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் நடைபெற்ற சோதனை இன்று காலை நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் சில பகுதிகளிலும் இன்று மதியம் சோதனை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட்கா ஊழல் விசாரணையில் சி.பி.ஐ. பிடி இறுகுவதால் இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். #GutkhaScam #CBIRaid

Tags:    

Similar News