செய்திகள்

செங்கோட்டை அருகே துப்பாக்கி-நாட்டு வெடிகுண்டுகளுடன் நுழைந்த 5 பேர் கைது

Published On 2018-09-05 09:27 GMT   |   Update On 2018-09-05 09:27 GMT
செங்கோட்டை அருகே துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளுடன் நுழைந்த 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டை:

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை செல்லும் வழியில் வனப்பகுதியில் குரங்குநாட்டு ஓடை உள்ளது. இங்கு உள்ள இசக்கி அம்மன் கோவில் அருகில் தனியார் நிலத்தில் நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது. இதுகுறித்து புளியரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மர்மகும்பல் பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கி என்று தெரியவந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது, ஒரு கும்பல் சந்தனமரங்களை வெட்டிக் கடத்தியது. அந்த கும்பல் நாட்டு துப்பாக்கியை காட்டி வனத்துறையினரை மிரட்டி, சந்தன மரங்களை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டது. அவ்வாறு மர்ம கும்பல் தப்பிச் செல்லும் போதும் நாட்டு துப்பாக்கியை போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் சந்தேகப்படும்படியாக 5 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் செங்கோட்டை முத்தழகி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முஸ்தபா(வயது 47), புளியரை புதுகாலனி தெருவை சேர்ந்த கருப்பசாமி(30), புளியரை வாட்டர்டேங் தெருவை சேர்ந்த சுரேஷ், புளியரை வடக்கு தெருவை சேர்ந்த மற்றொரு கருப்பசாமி, கற்குடியை சேர்ந்த தங்கதுரை என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் 5 பேரும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தது தெரியவந்தது. காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக பயன்படுத்த வைத்து இருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து 5 பேரையும் போலீசார் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும் நாட்டு துப்பாக்கி தொடர்பாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News