செய்திகள்

சாலை நடுவில் போடப்பட்ட பந்தல் அகற்றம்- புகார் கொடுத்தவர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2018-09-04 10:08 GMT   |   Update On 2018-09-04 10:08 GMT
ஆதம்பாக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக சாலை நடுவில் போடப்பட்ட பந்தலை அகற்றியது தொடர்பாக புகார் அளித்த பேராசிரியர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஆலந்தூர்:

ஆதம்பாக்கம், கிழக்கு கரிகாலன் தெருவில் விநாயகர் கோவில் உள்ளது. வருகிற 13-ந்தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக கோவில் அருகே பந்தல் போடப்பட்டு இருந்தது. இதற்காக சாலை நடுவே கம்பு நட்டு இருந்தனர்.

இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சுரேஷ் என்பவர் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார், மாநகராட்சி ஊழியர்களுடன் வந்து பந்தலை அகற்றினர். இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். பின்னர் சாலை நடுவே இருந்த பந்தல் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பந்தல் அமைக்க கோவில் நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையே புகார் கொடுத்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சுரேஷ் வீட்டை ஏராளமானோர் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடிப்பதால் சுரேஷ் வீட்டு முன்பும், கோவில் அருகேயும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News