செய்திகள்
கவர்னர் கிரண்பேடியுடன் மாணவி கலந்துரையாடிய காட்சி.

ஹெல்மெட் விழிப்புணர்வு கலந்துரையாடலில் கவர்னர் கிரண்பேடியிடம் வியாபாரி சரமாரி கேள்வி

Published On 2018-09-01 06:07 GMT   |   Update On 2018-09-01 06:07 GMT
புதுவையில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு கலந்துரையாடலில் கவர்னர் கிரண்பேடியிடம், வழிப்பறி கொள்ளையர்களை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று வியாபாரி சரமாரி கேள்வி எழுப்பினார். #PondicherryGovernor #Kiranbedi
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த வாரம் (சனிக்கிழமை) மாணவர்களுடன் சைக்கிளில் ராஜ்நிவாசில் இருந்து அரியாங்குப்பத்துக்கு பேரணியாக சென்றார்.

அதுபோல் இன்று காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் 50 பேருடன் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிளில் தவளக்குப்பத்துக்கு பேரணி சென்றார்.

பின்னர் அங்குள்ள அரவிந்தர் கண் ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் கிரண்பேடி பின்னர் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துரையாடினார்.

அப்போது கலந்துரையாடலில் ஒரு மாணவி பேசும் போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீங்கள் உத்தரவு பிறப்பித்தீர்கள்.


ஆனால், முதல்-அமைச்சர் நாராயணசாமி ஹெல்மெட் கட்டாயம் இல்லை என்றும், விருப்பம் உள்ளவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்லலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளாரே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கவர்னர் கிரண்பேடி இதனை முதல்- அமைச்சரிடம் சென்று கேளுங்கள் என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த குமார் பேசும் போது, விபத்தில் உயிர் இழப்புகளை தடுக்க இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது அவசியமானதுதான்.

அதே வேளையில் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி பலர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுகிறார்களே. இதனை தடுக்கவும், முறைப்படுத்தவும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கவர்னரிடம் சரமாரி கேள்வி எழுப்பினார்.

ஆனால், இதற்கு கவர்னர் கிரண்பேடி பதில் ஏதும் கூறாமல் நிகழ்ச்சியை முடித்து கொண்டு மாணவர்களுடன் அங்கிருந்து ராஜ்நிவாசுக்கு திரும்பினார்.

இந்த நிகழ்ச்சியின் போது வணிகவரித்துறை ஆணையர் ஸ்ரீநிவாஸ், அரவிந்தர் கண் ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். #PondicherryGovernor #Kiranbedi
Tags:    

Similar News