செய்திகள்
திருச்செந்தூர் கோவிலில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ சாமிதரிசனம் செய்ய வந்த காட்சி.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் டிடிவி தினகரன் சாமி தரிசனம்

Published On 2018-09-01 05:46 GMT   |   Update On 2018-09-01 05:46 GMT
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ சாமி தரிசனம் செய்தார். #TTVDhinakaran
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகர செயலாளர் மணல்மேடு முருசேகன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் நேராக கோவிலுக்குள் சென்று சுவாமி மூலவர், சண்முகர். தட்சணாமூர்த்தி சன்னதியில் வழிபாடு செய்துவிட்டு சூரசம்ஹார மூர்த்தி சன்னதி முன்பு நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து சண்முக விலாச மண்டபத்தில் உள்ள துலாபாரத்தில் 100 கிலோ அரிசி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் பா.ஜ.க. அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறுவது அவர்களின் கருத்து. எங்களின் நிலைப்பாடும் அதுதான். அதற்காக நாங்கள் காங்கிரஸ் நிலையை ஆதரித்து கூறவில்லை. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை கொல்லைப்புறமாக திறக்க முயற்சி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தல் வரும் போது கூட்டணி பற்றி அறிவிப்போம்.


திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறுவோம். 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இந்த அரசு நிரூபிக்க வேண்டியது வரும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தற்போது 1 கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர். ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோருடன் நாங்கள் சேரவேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதாவிற்கு எதிராக ஆட்சி நடத்துபவர்களுக்கு எதிராக அங்குள்ளவர்கள் அனைவரும் எங்களிடம் வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கழக அமைப்பு செயலாளர்கள் மாணிக்க ராஜா, லெட்சுமணன், மாநில ஜெ.பேரவை இணைச் செயலாளர் பரமசிவ அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.  #TTVDhinakaran
Tags:    

Similar News