செய்திகள்

பத்திரம் பதிவு செய்பவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி 3-ந்தேதி முதல் அறிமுகம்

Published On 2018-08-30 20:02 GMT   |   Update On 2018-08-30 20:27 GMT
தமிழக அரசின் பத்திர பதிவுத்துறையில், பதிவுப்பணி முடிந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வருகிற 3-ந் தேதி தொடங்கப்படுகிறது.
சென்னை:

தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பதிவுத்துறையில் ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் மூலம் https://tnreginet.gov.in என்ற இணையதளம் வழியாக பத்திரங்களை தயாரிக்கலாம் அல்லது தாங்களே சொந்தமாக பத்திரம் தயாரிக்கும் நிலையில் இணையதளத்தில் ஆவணச்சுருக்கத்தை உட்புகுத்தலாம். இதில் புதிதாக பத்திரம் பதிவு செய்பவர்களின் செல்போன் எண்ணை சேர்த்தால், அதனை சரிபார்த்து பதிவுத்துறை ஏற்றுக்கொள்கிறது. இதன் மூலம் ஆவணதாரர்கள் பல்வேறு வசதிகளை பெற முடியும்.

பதிவுப்பணி முடிந்தவுடன் பத்திரத்தை திரும்பபெற்று செல்ல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) ஆவணதாரருக்கு அனுப்பப்படும். பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்ட தேதியில் ஆவணம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்ட விவரம் உறுதி செய்யப்படும். நிலுவையில் இருக்கும் பத்திரங்களின் நிலை குறித்து ஆவணதாரருக்கு அனுப்பப்படும். இழப்பீடு தொகை கட்ட வேண்டும் என்றால் அது குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். சந்தை மதிப்பு நிர்ணய ஆணை பிறப்பிக்கப்பட்ட விவரங்களும், செலுத்த வேண்டிய குறைவு முத்திரை தீர்வை, குறைவு பதிவு கட்டணம் போன்ற விவரங்களும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இந்த திட்டம் வருகிற 3-ந் தேதி தொடங்கப்படுகிறது.

பதிவு அலுவலர் பதிவு மறுப்பு சீட்டு வழங்காமல் வாய்மொழியாக பதிவை மறுக்கும் நிகழ்வுகளில் பதிவுத்துறை தலைவர் அலுவலக கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 102 5174 தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News