செய்திகள்

ஈரோடு பகுதிகளில் செல்போன்களை பறித்த 6 சிறுவர்கள் சிக்கினர்

Published On 2018-08-30 17:04 GMT   |   Update On 2018-08-30 17:04 GMT
ஈரோடு பகுதிகளில் செல்போன்களை பறித்த சிறுவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாநகர் பகுதியில் சமீப காலமாக செல்போன் பறிக்கும் சம்பவம் அதிகளவு நடந்து வந்தது. குறிப்பாக இரவு நேரங்களில் செல்போன் பேசியபடி தனியாக நடந்து செல்லும் நபர்களை குறிவைத்து இந்த வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன.

வெண்டிபாளையம் சூரம்பட்டி போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம கும்பல் செல்போன் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு டவுன் போலீசார் வெண்டிப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சுற்றித்திரிந்த 6 சிறுவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவர்கள் 6 பேரும் ஈரோட்டில் பல்வேறு பகுதியில் செல்போன் திருட்டு செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

6 சிறுவர்களும் குறிப்பிட்ட பகுதிகளை நோட்டமிட்டு தனியாக வருபவர்களிடம் செல்போன்களை அபேஸ் செய்து தப்பி விடுகின்றனர்.அவர்களிடமிருந்து சில செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 6 பேரையும் கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News