செய்திகள்

சிதம்பரத்தில் பெண்கள் காலிகுடங்களுடன் போராட்டம்

Published On 2018-08-30 21:40 IST   |   Update On 2018-08-30 21:40:00 IST
குடிநீரில் சாக்கடை கலந்து வருவதை கண்டித்து சிதம்பரத்தில் பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் கொத்தங்குடிதெரு, குமரன்தெரு போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 

எனவே சுத்தமான குடிநீர் வழங்கக்கோரியும், சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் தொடர்ந்து சாக்கடை கலந்து வந்தது. 

இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை சிதம்பரம் பஸ்நிலையம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News