செய்திகள்

ஓடும் ரெயிலில் எலி கடித்த பயணிக்கு ரூ.32 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

Published On 2018-08-30 06:59 GMT   |   Update On 2018-08-30 06:59 GMT
ஓடும் ரெயிலில் எலி கடித்த பயணிக்கு ரூ. 32 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தர விடப்பட்டுள்ளது. #Court

சென்னை:

சென்னையைச் சேர்ந்த ரெயில் பயணி வெங்கடாசலம். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆக்ஸ்டு மாதம் 8-ந் தேதி சேலம் வழியாக சென்னை எழும்பூர் வரும் ரெயிலில் பயணம் செய்தார்.

அப்போது அவரை எலி கடித்துவிட்டது. இதனால் அவரது காலில் ரத்தம் கொட்டியது. கடுமையான வலியும் ஏற்பட்டது. இதுபற்றி அவர் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தும் எந்த முதல்உதவியும் அளிக்கப்படவில்லை. அடுத்த ரெயில் நிலையத்தில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறிவிட்டார்.

இதனால் ரெயில் எழும்பூர் வந்து சேர்ந்ததும் ரெயில்வே போலீசிலும் அதிகாரிகளிடமும் புகார் செய்தார். முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வெங்கடாசலம் பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெற்றார்.

எலி கடித்த வேதனை ஒருபுறம், முதலுதவி சிகிச்சை பெற முடியாமல் தவித்தது ஒருபுறம் என பல வழிகளில் துன்பத்துக்கு ஆளான வெங்கடாசலம் இதுபற்றி நுகர்வோர் கோர்ட்டில் முறையிட்டு மனுதாக்கல் செய்தார். தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடு கேட்டு இருந்தார்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்ற நீதிபதி ஆர்.வி. தீனதயாளன், உறுப்பினர் ராஜலட்சுமி ஆகியோர் விசாரித்தனர். இதில் ரெயில் பயணிக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் அசவுகரியத்துக்காக அவருக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

மேலும் மருத்துவ செலவு ரூ. 2 ஆயிரம், வழக்கு செலவு ரூ. 5 ஆயிரம் சேர்த்து ரூ. 32 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடன் 3 மாதத்தில் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News