செய்திகள்

சீர்காழி அருகே விபத்து: 700 சாராயம் பாக்கெட் கடத்தி வந்த வாலிபர் மீது ஆட்டோ மோதியது

Published On 2018-08-28 11:26 GMT   |   Update On 2018-08-28 11:26 GMT
சீர்காழி அருகே 700 சாராயம் பாக்கெட் கடத்தி வந்த வாலிபர் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
சீர்காழி:

நாகை மாவட்டம் பொறையாறு அருகே நல்லாத்தூரில் இருந்து சீர்காழி நோக்கி ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தார்.

அப்போது சீர்காழி அடுத்த வழுவகுடி என்ற இடத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் படுகாயம் அடைந்து அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி சென்றனர்.

இதற்கிடையே விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் அருகில் சாராய பாக்கெட்டுகள் சிதறி கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் இருந்த 700 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அந்த பாக்கெட்டுகளில் பாண்டி ஐஸ் என்று எழுதப்பட்டு இருந்தது. இதனால் காரைக்காலில் இருந்து அந்த வாலிபர் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த போது விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து காயம் அடைந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தனது பெயர் குமார் என்றும் சொந்த ஊர் மங்கைநல்லூர் அருகே உள்ள கழனிவாசல் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக குமாரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருந்த போலீசாரிடம் குமார், தனது பெயரை சாமி என்றும், சொந்த ஊர் மன்னம்பந்தல் என்றும் தெரிவித்துள்ளார்.

பெயரை மாறி மாறி போலீசாரிடம் தெரிவித்ததால் வாலிபர் குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews
Tags:    

Similar News