செய்திகள்

கோத்தகிரி அருகே தொழிலாளியை அடித்து கொன்ற 3 பேர் கைது

Published On 2018-08-27 15:59 GMT   |   Update On 2018-08-27 15:59 GMT
கோத்தகிரி அருகே தொழிலாளியை அடித்து கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி:

கோத்தகிரி அருகே ஓம்நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 43). தொழிலாளி. இவருடைய மனைவி ராசாத்தி(38). இவர்களுக்கு கவின்(10) என்ற மகனும், காவியா(8) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் மகேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன்கள் புவனேஷ்வரன்(22) மற்றும் சதீஷ்(19) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மகேந்திரன் நேற்று காலை 8 மணியளவில் எஸ்.கைகாட்டிக்கு சென்றார். அங்கு புவனேஷ்வரன்(22), சதீஷ்(19) மற்றும் இவர்களது நண்பரான பிரட்லீ என்ற நாகராஜ்(25) ஆகியோர் நின்றிருந்தனர். அப்போது இவர்களுக்கும், மகேந்திரனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் இரும்பு கம்பியால் மகேந்திரனை தாக்கினர். அதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார், அங்கு விரைந்து வந்தனர். பின்னர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து புவனேஷ்வரன், சதீஷ், நாகராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதனிடையே மகேந்திரனை கொலை செய்த 3 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோத்தகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் கொலை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
Tags:    

Similar News