செய்திகள்

ஜெயிலில் மரணம் அடைந்த சிவகிரி கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Published On 2018-08-25 17:30 GMT   |   Update On 2018-08-25 17:30 GMT
பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் மரணம் அடைந்த சிவகிரி கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவி பட்டினத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில், கணேசன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கணேசனை ஜாமீனில் எடுக்க அவருடைய உறவினர்கள் முயற்சி செய்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் சிறையில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைதி சாவில் ஏதேனும் மர்மம் உள்ளதா? என்று நெல்லை உதவி கலெக்டர் மைதிலி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இறந்த கைதி கணேசனின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் பாளை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து கணேசனின் உறவினர்கள், அவரது உடலை பெற்று சென்றனர். ஆனாலும் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News