செய்திகள்

குடிநீர் வினியோகிக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2018-08-25 16:45 GMT   |   Update On 2018-08-25 16:45 GMT
குடிநீர் வினியோகிக்க கோரி கீழக்கணவாய் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் காசு கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே குடிநீர் வினியோகிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தினர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்தகிராமமக்கள் நேற்று காலையில் கீழக்கணவாய் பஸ் நிறுத்தம் அருகே பெரம்பலூர்-செட்டிக்குளம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணி வகுத்து நீண்ட வரிசையில் நின்றன.

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் தற்காலிகமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பின்னர் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து அந்தப்பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News