செய்திகள்

அரசின் அனுமதி பெற்று செங்கல் சூளைக்கு மண் கடத்தல்

Published On 2018-08-23 17:48 IST   |   Update On 2018-08-23 17:48:00 IST
பழனி அருகே விவசாயத்துக்கு ஓடை மண் எடுக்க அனுமதி பெற்று செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி:

பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பணிகளுக்கு அனுமதி பெற்று வண்டல் மண் மற்றும் ஓடை மண் எடுத்து வருகின்றனர். சமீப காலமாக விவசாய பணிக்கு அந்த மண்ணை பயன்படுத்தாமல் செங்கல் சூளைக்கு சுய லாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மட்டுமின்றி ஓடைகளில் இருந்து மண் அள்ளிச் செல்லும் லாரி மற்றும் டிராக்டர்கள் கிராமங்களில் மின்னல் வேகத்தில் சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மண் அள்ளிச் சென்ற லாரி மின்னல் வேகத்தில் சென்று பள்ளி வாகனம் மீது மோதியது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதை தடுக்கவும், அசுரவேகத்தில் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன் வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News