செய்திகள்

மகளிர் சுய உதவி குழு முன்னேற்றத்திற்கு வங்கியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்- கலெக்டர் பேச்சு

Published On 2018-08-22 14:57 GMT   |   Update On 2018-08-22 14:57 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் முன்னேற்றத்திற்கு வங்கியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் கணேஷ் பேசியுள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள வங்கியாளர்களுக்கான நிதி பங்களிப்பு மற்றும் நிதிசார் கல்வி குறித்த பயிற்சி வகுப்பு  கலெக்டர் கணேஷ்  தலைமையில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

மகளிர் திட்டத்தின் மூலம் சுயஉதவிக் குழுவினருக்கு முதல் வங்கி இணைப்பு, நேரடி கடன், தொழில் கடன் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுயஉதவிக் குழுவினருக்கு  வழங்கப்படும் கடன்களை எளிதாக வழங்குவது குறித்து வங்கி மேலாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 9 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவித்தொகைக்கான காசோலைகளும் வழங்கப் பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் முறைகள், செயல்படுத்தும் திட்டங்கள், பயனாளிகள் தேர்வு, கடன் தவணையை திருப்பி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட வுள்ளது. மேலும் இதே போன்று  நான்கு கட்டங்களாக பிற பயிற்சி வகுப்புகளும் வங்கியாளர்களுக்கு நடைபெறவுள்ளது. 

எனவே இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள வங்கியாளர்கள் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் முன்னேற்றத்திற்கு வங்கியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். 

இவ்வாறு  கலெக்டர் கூறினார்.
Tags:    

Similar News