வாஜ்பாய் மறைவு: மயிலாடுதுறை, சீர்காழியில் வியாபாரிகள் கடையடைப்பு
மயிலாடுதுறை:
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் டெல்லியில் நேற்று காலமானார்.
வாஜ்பாயின் மறைவுக்கு மத்திய அரசு சார்பில் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக அரசு சார்பிலும் இன்று ஒருநாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாஜ்பாய் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்து இரங்கல் தெரிவித்தனர். இதனால் நகரில் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
மயிலாடுதுறையில் இன்று மாலை பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் மவுன ஊர்வலம் நடக்கிறது. இதில் அனைத்து கட்சியினர், வணிக சங்கத்தினர் கலந்து கொள்கின்றனர். இதன்பிறகு கிட்டப்பா அங்காடி முன்பு வாஜ்பாய் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இதேபோல் சீர்காழி பகுதிகளிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.