செய்திகள்

கேரளாவில் வெள்ளம் - வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

Published On 2018-08-16 06:56 GMT   |   Update On 2018-08-16 06:56 GMT
கேரள வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் விரைவில் மீள, நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

கேரள மாநிலத்தில் நீடித்து வரும் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகள், உடமைகளை இழந்து தவிக்கிறார்கள்.

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர்களில் கமல் ரூ. 25 லட்சமும், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சமும் நிவாரண நிதி அளித்தனர். இதைபோல் தமிழகத்தில் பலவேறு பகுதிகளில் இருந்தும் தன்னார்வ அமைப்புகள் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் இயற்கைச் சிற்றங்கள் நீங்கி, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் விரைவில் மீளவும், வெள்ளத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டியும், நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

வேளாங்கண்ணி பேராலய விண்மீன் ஆலயத்தில் நடந்த இந்த பிரார்த்தனையை பேராலய அதிபர் ஏ.எம்.ஏ.பிரபாகர் அடிகளார் மற்றும் உதவி பங்குத் தந்தையர்கள் முன்னின்று நடத்தி வைத்தனர். இதில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News