செய்திகள்

விடிய, விடிய சாரல் மழை: திருவள்ளூரில் 59 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது

Published On 2018-08-15 11:05 GMT   |   Update On 2018-08-15 11:05 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய நீடித்த மழை இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.
திருவள்ளூர்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. இரவு பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய நீடித்த மழை இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.

இதேபோல் காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் புறநகர்களில் கன மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவள்ளூர், திருத்தணி,  செம்பரம்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாலை முதல் மழை வெளுத்து வாங்கியது. 

சோழவரம், செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதியில் விட்டு விட்டு லேசான மழை பெய்தபடி உள்ளது.  இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டம் முழுவதும் இன்று காலையும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

அதிகபட்சமாக  திருவள்ளூரில்  59 மி.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக கும்மிடிப்பூண்டியில்15 மி.மீட்டர்மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்: (மி.மீட்டரில்) வருமாறு:-

திருவள்ளூர்- 59
செம்பரம்பாக்கம்- 53  
திருத்தணி- 51
அம்பத்தூர்- 49
பூந்தமல்லி- 48 
திருவாலங்காடு- 48 
பூண்டி- 45 
பள்ளிப்பட்டு- 40 
ஊத்துக்கோட்டை- 19 
தாமரைப்பாக்கம்- 32
ஆர்.கே. பட்டு- 30   
சோழவரம்- 26 
செங்குன்றம்- 17.20 
பொன்னேரி- 16
கும்மிடிப்பூண்டி- 15.
Tags:    

Similar News