செய்திகள்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டது

Published On 2018-08-14 11:06 GMT   |   Update On 2018-08-14 11:06 GMT
நீலகிரியில் பலத்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை அணையின் நீர்மட்டம் 100 கனஅடியை எட்டியது. #BhavanisagarDam
ஈரோடு:

தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது. இதனால் நீலகிரி மற்றும் கேரள மாநில வனப்பகுதி எல்லையில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.

நீலகிரியில் பெய்து வரும் கன மழையால் கடந்த 2 நாட்களாகவே பவானிசாகர் அணைக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

இன்று (செவ்வாய்க்கி ழமை) காலை 10 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 928 கன அடி வீதம் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டமும் உயர்ந்து இன்று 100 அடியை எட்டியது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியதையடுத்து ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு 850 கன அடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 450 கன அடியும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 200 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் மொத்த கொள்ளளவு 120 அடி ஆகும். இதில் 15 அடி சேறும் சகதியும் நிறைந்தது. மீதி 115 அடிக்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. #BhavanisagarDam
Tags:    

Similar News