டி.என்.பாளையத்தில் 3 மாத குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அனுமன் நகரை சேர்ந்தவர் தேன்மொழி (வயது 25). இவரது கணவர் பெயர் கேசவராஜ் சென்னிமலையை சேர்ந்தவர், 4 மாத கர்ப்பிணியாக இருந்ததால் தேன்மொழி தனது பெற்றோர் ஊரான டி.என்.பாளையம் அனுமன் நகருக்கு வந்து தங்கினார்.
கடந்த 3 மாதத்துக்கு முன் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பிரணவ்வர்ஷன் என்று பெயர் சூட்டினார்.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு வீட்டில் இருந்த தேன்மொழி திடீரெனதனது உடல் மீதும் தனது குழந்தை மீதும் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் இருவரது உடல் முழுவதும் தீ மள...மள...வென பிடித்து உடல் கருகி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கரிக்கட்டையாக கிடந்த தேன்மொழி மற்றும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தேன்மொழி எதற்காக தனது கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.