செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

Published On 2018-08-13 04:56 GMT   |   Update On 2018-08-13 11:13 GMT
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்துள்ளது. #Sterlite

சென்னை:

தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பல வருடங்களாக போராடி வந்தனர்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து கலவரமாக மாறியது. இதை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிர் இழந்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான இசைவாணையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்க மறுத்தது. இதை தொடர்ந்து ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 9-ந்தேதி அனுமதி அளித்தது.

 


இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனும் கலந்து கொண்டு சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு இன்று அப்பீல் செய்துள்ளது.

Tags:    

Similar News