செய்திகள்

காதல் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயற்சி- கணவர் கைது

Published On 2018-08-10 16:18 GMT   |   Update On 2018-08-10 16:18 GMT
தக்கலை அருகே காதல் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.
தக்கலை:

தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டை சேர்ந்தவர் திருமால். இவரது மகள் சுசி பிரியா (வயது 29). சுசிபிரியாவுக்கும், கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்த கிறிஸ்டி ஜெனித் (32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். திருமணம் நடந்த சில ஆண்டுகளில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் சுசிபிரியாவும், கிறிஸ்டி ஜெனித்தும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மேலும் இவர்கள் இடையே விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது. இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சுசிபிரியா நேற்று தக்கலை போலீசில் கணவர் கிறிஸ்டி ஜெனித் மீது ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- 

தக்கலை திருவிதாங்கோடு பகுதியில் உள்ள என் வீட்டில் நேற்று மாலை நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது கிறிஸ்டி ஜெனித்தும், மேலும் 4 பேரும் ஒரு காரில் அங்கு வந்தனர். அவர்கள் என்னை வலுகட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி செல்ல முயன்றனர்.

நான் அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடினேன். அப்போது அவர்கள் என்னை கார் ஏற்றி கொல்ல முயன்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

சுசிபிரியா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் சுசிபிரியாவின் கணவர் கிறிஸ்டி ஜெகன் மற்றும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் கிறிஸ்டி ஜெகன் கைது செய்யப்பட்டார். மற்ற 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News