சமுதாய கட்டிடங்களின் பழுதுகளை சீர் செய்ய வேண்டும்- கலெக்டர் நடராஜன் உத்தரவு
ராமநாதபுரம்:
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கலெக்டர் நடராஜன் நேரடியாக சென்று ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
முதலாவதாக கலெக்டர் நடராஜன் கமுதக்குடி கிராமத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து வெங்காளூர் ஊராட்சிக்கு நேரில் சென்று வெங்காளூர் மற்றும் சங்கன்கோட்டை கிராமங்களில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து அதில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளின் வயதுக்கேற்ற வளர்ச்சி மற்றும் சரியான எடை உள்ளனவா என்பது குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தார்.
மேலும் சராசரி அளவை விட மிக குறைவான எடையளவு உள்ள குழந்தைகளை கண்டறியும் பட்சத்தில் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்திடுமாறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அந்த கிராமங்களில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டிடங்கள், சமுதாய கூட கட்டிடங்களை ஆய்வு செய்து அதிலுள்ள பழுதுகளை உடனடியாக சரி செய்து கொடுக்குமாறும், அங்கன்வாடி கட்டிடத்திற்கு உடனடியாக மின்வசதி சரிசெய்து கொடுக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் கிராம பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி, பள்ளி குழந்தைகள் மழைக்காலங்களில் சென்றுவர வசதியாக பாலம் கட்ட வேண்டும் எனவும் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு வழிகாண வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.