செய்திகள்

பண்ருட்டி அருகே நாயால் இருதரப்பினர் மோதல் - 4 பேர் காயம்

Published On 2018-08-09 08:07 GMT   |   Update On 2018-08-09 08:07 GMT
பண்ருட்டி அருகே நாய் கடிக்க வந்ததால், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கீழ்கவரப்பட்டு காலனியை பகுதியை சேர்ந்தவர் ரவி. தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இவர் கீழ்கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆறுமுகத்தின் வீட்டில் இருந்த நாய் திடீரென வள்ளியை விரட்டி சென்று கடிப்பதுபோல் சென்றது. இதில் அதிர்ச்சியடைந்த வள்ளி அங்கிருந்து வேகமாக ஓடினார். பின்னர் வீட்டுக்கு சென்ற வள்ளி தனது கணவர் ரவியிடம் நடந்ததை கூறினார்.

பின்னர் ரவி தனது மனைவி வள்ளி மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு ஆறுமுகத்தின் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி தட்டிக் கேட்டார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இந்த தாக்குதலில் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியும், ரவி மற்றும் அவரது மனைவி வள்ளியும் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் அவர்களை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் இருதரப்பினரும் புகார் செய்தனர். ரவி கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகம், அசோக், குப்பன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் அசோக்கை கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில் ரவி, திவான், ராதா, ஸ்டாலின் ஆகிய 4 பேரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் திவானை கைது செய்தனர்.

இருதரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉஷேன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News