செய்திகள்

குடியாத்தத்தில் அனுமதியின்றி வைத்த கருணாநிதி சிலை அகற்றம்

Published On 2018-08-09 07:17 GMT   |   Update On 2018-08-09 07:17 GMT
குடியாத்தத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கருணாநிதி சிலை உடனே அகற்றப்பட்டது.
குடியாத்தம்:

குடியாத்தம் தி.மு.க. வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜி.ஆர்.கே. கிருஷ்ணமூர்த்தி. இவர் கருணாநிதி மறைவையொட்டி சோகத்தில் ஆழ்ந்தார். நேற்று குடியாத்தம் விநாயகபுரம் என்ற இடத்தில் தி.மு.க. கொடி கம்பம் அருகே 2½ அடி உயர கருணாநிதி சிலை வைத்து திறந்தார்.

கல்லால் அமைக்கப்பட்ட அந்த சிலையில் வெண்கலம் போல பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. அதன் பீடத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் படங்கள் வைத்திருந்தனர். கருணாநிதி சிலையை கண்ட பொதுமக்கள் சிலை முன்பு அஞ்சலி செலுத்தி சென்றனர்.

இது பற்றி தகவலறிந்த வருவாய்துறை, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டதாக கூறி உடனடியாக சிலையை அகற்றினர். அகற்றப்பட்ட சிலை மூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு ஜி.ஆர்.கே. மூர்த்தி பரதராமி அடுத்த சாமிரெட்டி பள்ளி கிராமத்தில் கருணாநிதிக்கு கோவில் கட்ட முயற்சி செய்தார்.

கட்சி தலைமை தலையீட்டால் அதனை கைவிட்டார். தற்போது அவர் கருணாநிதிக்கு முதன் முதலாக சிலை திறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி மூர்த்தி கூறுகையில்:- அனுமதி பெறாததால் கருணாநிதி சிலையை அகற்றியுள்ளனர். உரிய அனுமதி பெற்று மீண்டும் கருணாநிதி சிலையை திறப்பேன் என்றார்.
Tags:    

Similar News