செய்திகள்

கிருஷ்ணகிரியில் ஒரே பதிவு எண் கொண்ட 2 சரக்கு வேன்கள் பறிமுதல்

Published On 2018-08-08 16:06 GMT   |   Update On 2018-08-08 16:06 GMT
கிருஷ்ணகிரியில் ஒரே பதிவு எண் கொண்ட 2 சரக்கு வேன்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பிக்அப் சரக்கு வேன், பழுதான மற்றொரு பிக்-அப் வேனை கயிற்றில் கட்டி இழுத்துச் செல்வதை போலீசார் கண்டனர்.

அவ்வாறு சென்ற அந்த வாகனம், போக்குவரத்து சிக்னலை மீறி சென்றது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வாகனங்களை தடுத்த நிறுத்த முயன்றபோது, முன்னால் சென்ற வாகனத்தின் மீது பழுதான வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இரு வாகனங்களின் ஆவணங்களை போலீசார் சரிபார்த்தபோது, இரு வாகனங்களின் பதிவெண்கள் ஒன்றாக (டி.என்.24-ஏ.எப்.4763) இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் இரு வாகனங்களும் வெங்கிலிகானப்பள்ளியைச் சேர்ந்த சர்தார் (57) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

ஒரு வாகனத்தை போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்த நிலையில் மற்றொரு வாகனத்தை பதிவு செய்யாமலேயே அதே பதிவு எண்ணில் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த இரு வாகனங்களையும் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போக்கு வரத்து போலீசார் கூறியதாவது:-

வாகனத்தை பதிவு செய்யாமல் மற்றொரு வாகனத்தின் பதிவு எண்ணை பயன்படுத்தி உள்ளதால், முதல் கட்டமாக பதிவு செய்யாத வாகனம் பறிமுதல் செய்யப்படும். அத்துடன் பதிவு செய்யப்படாத வாகனத்திற்கான ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் திருட்டு வாகனமாக இருந்தால் அந்த வாகனத்தை பயன்படுத்தியவர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News