கருணாநிதி மரணம்: மதுரை வாலிபர் மாரடைப்பால் மரணம்
மதுரை:
மதுரை ரிசர்வ் லைன் காலாங்கரையை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 27). அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்த இவர் 47-வது வார்டு தி.மு.க. இளைஞரணி நிர்வாகி ஆவார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அழகுராஜா சோகமாக காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை கருணாநிதி உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என செய்தி வந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அழகுராஜா வீட்டில் அதுதொடர்பாக செய்திகளை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கருணாநிதி மரணமடைந்தார் என்ற செய்தி வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அழகுராஜா துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.
அவரை குடும்பத்தினர் சமரசம் செய்தனர். ஆனாலும் அழகுராஜா சோகத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அழகுராஜா பரிதாபமாக இறந்தார். #karunanidhideath #dmk