செய்திகள்

முதலியார்பேட்டையில் சுவரில் தலை மோதி ஒர்க்‌ஷாப் உரிமையாளர் பலி

Published On 2018-08-06 12:21 GMT   |   Update On 2018-08-06 12:21 GMT
முதலியார்பேட்டையில் பள்ளத்தில் இறங்கிய காரை தடுக்க முயன்றபோது ஒர்க்‌ஷாப் உரிமையாளர் சுவரில் தலைமோதி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை துலுக்கானத்தம்மன் நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 45). இவர் முதலியார் பேட்டை காயத்ரி நகரில் கார் டிங்கரிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை ஒர்க்‌ஷாப் எதிரே காரை நிறுத்தி திருநாவுக்கரசு டிங்கரிங் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது மேகம் திரண்டு மழை பெய்யவே காரை அவசர அவசரமாக ஒர்க்‌ஷாப்பின் உள்ளே தள்ளி வந்தார்.

அப்போது கார் அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியதால் பதட்டத்தில் காரை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக காருடன் பள்ளம் அருகே உள்ள சுவரில் திருநாவுக்கரசு தலை மோதியது.

இதில், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து திருநாவுக்கரசு இறந்து போனார். ஆனால், திருநாவுக்கரசு இறந்து கிடந்தது தெரியாமல் அவரது மனைவி வனஜா ஒர்க்‌ஷாப்புக்கு வந்து தேடி பார்த்தார். பின்னர் வேலை வி‌ஷயமாக வெளியே சென்றிருப்பார் என கருதி வீட்டுக்கு வந்துவிட்டார்.

நேற்று காலை கார் உரிமையாளர் ஒர்க்‌ஷாப்புக்கு வந்து பார்த்த போது தான் திருநாவுக்கரசு இறந்து கிடந்தது தெரிய வந்தது. பின்னர் இது பற்றி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News