பள்ளத்தி விடுதியில் மண்புழு உர பயன்பாடு விளக்க கூட்டம்
திருவரங்குளம்:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உர பயன் பாட்டை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்தும் விதமாக பல்வேறு பயிற்சிகளை வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையம் வழங்கி வருகிறது. அந்த வகையில் மண்புழு உர பயன்பாடு விளக்கக் கூட்டம் மற்றும் மண்புழு உர உற்பத்தித்திடல் பார்வையிடல் பள்ளத்தி விடுதி கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வம்பன் வேளாண்மை அறவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, மண் புழுக்களை கொண்டு பண்ணை கழிவுகளை உரமாக்க முடியும். அதனால் சுற்றுப் புறமும் தூய்மை அடையும். உபரி வருமானமும் நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவிப் பேராசிரியர் நெல்சன் நவமணிராஜ், வேளாண் விரிவாக்க பயிற்சி உதவியாளர் சிவபாலன் ஆகியோர் அம்புலி ஆறு உற்பத்தி குழுவினரால் நடத்தப்படும் மண்புழு உரம் தயாரிப்பு திடலை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.
நிகழ்ச்சியில் 35-க்கும் மேற்பட்ட விவசாய பெண்கள் மற்றும் முன்னோடி விவசாயிகளான கூவாட்டுபட்டி முருகேசன், வடகாடு சித்ரா, குருந்தடிமணை செல்வி, பள்ளத்திவிடுதி மனோன்மணி, கடுக்காகாடு, மார்டின்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.