செய்திகள்

நாகை மாவட்டத்தில் தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ரதம்

Published On 2018-08-05 18:21 GMT   |   Update On 2018-08-05 18:21 GMT
நாகை மாவட்டத்தில் தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட வருவாய் அதிகாரி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நாகப்பட்டினம்:

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்-2018 அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக தூய்மை கணக்கெடுப்பு மூலம் மாவட்டங்களை தூய்மையின் அடிப்படையில் தரவரிசை படுத்துதல் பணி கடந்த 1-ந்தேதி தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதற்காக அங்கீகரிக்கப்பட்ட கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்றின் மூலமாக ஊரக பகுதிகளில் தூய்மை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பணிகள் மத்திய அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் செயல்படுத்தபட உள்ளது. மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் குறிப்பிட்ட நிறுவனத்தால் மாதிரி அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திடவும், ஊராட்சியின் பொது இடங்களை தூய்மையாக பராமரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தூய்மை கணக்கெடுப்பு (ஊரகம்)-2018 என்ற சின்னம் கொண்ட வில்லைகள் அரசு வாகனங்களில் ஓட்டப்பட்டன.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோவிந்தராஜுலு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  
Tags:    

Similar News