செய்திகள்
நெல்லையில் போலி பீடி பண்டல்களுடன் சுரண்டை வாலிபர் கைது
நெல்லையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி பீடி பண்டல்களுடன் நின்ற சுரண்டை வாலிபரை கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பிரபல பீடி நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகள் உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பீடி நிறுவனத்தினரும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மேலப்பாளையம் ஆசுரா தெருவில் ஒரு இடத்தில் போலி பீடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 80 பண்டல்களில் போலி பீடிகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
இது தொடர்பாக சுரண்டை அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த நாகராஜன்(41) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.