செய்திகள்

குன்னத்தூர் அருகே மூதாட்டியை கொன்று நகை பறித்த குடும்ப நண்பர் கைது

Published On 2018-08-02 08:46 GMT   |   Update On 2018-08-02 08:46 GMT
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே மூதாட்டியை கொன்று நகையை பறித்த குடும்ப நண்பரை போலீசார் கைது செய்தனர்.
குன்னத்தூர்:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் ஒடத்தலாம்பதி ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சரோஜா (வயது 80). இவரை கடந்த மாதம் 2-ந்தேதி 2 பவுன் நகை மற்றும் மோதிரத்திற்காக மர்ம நபர் கொலை செய்தார்.

இது குறித்து சரோஜாவின் பேரன் ஞானவேல் போலீசில் புகார் செய்தார். அவினாசி டி.எஸ்.பி. மேற்பார்வையில் குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, பழனிசாமி, கிருஷ்ணகுமார், தேவராஜ் ஆகியோர் கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர்.

28 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சரோஜாவின் குடும்ப நண்பரான பாலமுருகன் (32) என்பவரது தொலைபேசி எண்ணை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை பிடித்து அதிரடியாக விசாரித்தனர்.

விசாரணையில் தானும், தனது நண்பர் சுகுமார் என்பவரும் சேர்ந்து மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்று விட்டு அவர் அணிந்திருந்த நகையை திருடினோம் என்று கூறினார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுகுமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News